அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் உள்ள தோட்டத்தில் தவ்வை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாண்டிய நாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் ஸ்ரீதர் கூறினார்.அவர் கூறியதாவது:தவ்வை வழிபாடு என்பது பல்லவ பேரரசர்கள் காலத்தில் தோன்றியது. தவ்வைக்கு மூத்ததேவி, ஜேஷ்டா தேவி எனவும் பெயர்கள் உண்டு. பாற்கடலில் அமிர்தம் கடையும் போது திருமகளுக்கு முன்பு தோன்றியதால் இவருக்கு மூத்ததேவி என பெயராயிற்று. இவர் சனிஸ்வரருக்கு மனைவி ஆவார். இவர்களுக்கு மாந்தன் என்ற மகனும், மாந்தி என்ற மகளும் உண்டு. பொதுவாக பல்லவ மற்றும் சோழ நாடுகளில் காணப்படும் தவ்வை சிற்பத்தில் தவ்வை மட்டும் பிரதானமாக இருப்பார்.
மாந்தனும், மாந்தியும் சிறிய உருவமாக இருப்பார்கள். ஆனால் தற்போது கிடைக்கப்பட்ட சிற்பத்தில் அது போல் இல்லை. பாண்டிய தவ்வை சிற்பம் அரிதாகவே காணப்படுகிறது. தவ்வையின் வலது கரத்தில் அபய முத்திரையுடன் உள்ளது. இடது கரம் தொடையில் உள்ளது. சிற்பத்தின் அருகே காகக் கொடி உள்ளது.மாந்தன் கையில் அன்னையின் ஆயுதமான துடைப்பம் காணப்படுகிறது.மூத்த தேவிஎன்பது துரதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இது தவறு. இவர் பயிர் வளமும், மகப்பேற்று வளத்தையும் அருளும் தேவதை. வட மொழியில் இவரை ஜேஷ்டா தேவி என்பர். இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,என்றார்.