பதிவு செய்த நாள்
22
செப்
2020
09:09
திருப்பதி : திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, இரண்டு திருக்குடைகளை, ஹிந்து தர்மார்த்த சமிதியின் தலைவர் கோபால்ஜி சமர்ப்பித்தார்.
திருமலை ஏழுமலையானுக்கு, வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும் போது, அதில் முக்கிய பங்கு வகிப்பது, வெண் பட்டால் தயாரிக்கப்பட்ட திருக்குடைகள். இந்த திருக்குடைகள், வாகன சேவையின் போது, உற்சவமூர்த்திகளின் மேல் ஏதும் விழாத வண்ணம் தடுக்கிறது. ஹிந்து தர்மார்த்த சமிதி, 11 திருக்குடைகளை, ஆண்டுதோறும் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகிறது.பிரம்மோற்சவம் துவங்கும் முன், சென்னையிலிருந்து இந்த திருக்குடைகளின் ஊர்வலம் புறப்படும்.இந்த ஊர்வலத்தை காண, பக்தர்கள், சாலைகளில் திரள்வர். தற்போது, கொரோனா தொற்று காரணமாக, திருக்குடைகள் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாததால், திருக்குடைகள், வாகனம் மூலம், திருமலைக்கு கொண்டு வரப்பட்டது.
அதில், இரண்டு திருக்குடைகள், வழக்கம் போல், திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டன. ஹிந்து தர்மார்த்த சமிதியின் தலைவர் கோபால்ஜி, திருக்குடைகளை நேற்று மதியம், தாயார் கோயில் அதிகாரி ஜான்சிராணியிடம் ஒப்படைத்தார்.மற்ற திருக்குடைகள், திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.