பதிவு செய்த நாள்
24
அக்
2020
10:10
திருப்பூர்:நாளை கொண்டாடப்படும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு மூன்று டன் செவ்வந்தி, சம்பங்கி பூ விற்பனைக்கு வந்திருந்தது. திண்டுக்கல், நிலக்கோட்டை, சத்தி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதியில் இருந்து திருப்பூர் பூ மார்க்கெட்டுக்கு ஒன்றரை டன் செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்கள் வந்துள்ளன.பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை வட்டார பகுதியில் தொடர் மழை பெய்வதால் செவ்வந்தி வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
ஆர்டரை விட கூடுதலாக பூ கிடைப்பதால், செவ்வந்தி கிலோ, 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பூ வரத்து மற்றும் விற்பனைக்கு ஏற்ப இன்றும், நாளையும் விலையில் மாறுதல் இருக்கும், என்றனர்.பூவுடன் சேர்ந்து மணந்த நார்!பண்டிகை என்றாலே பூக்களுக்கு மவுசு கூடும். ஆனால், ஆயுத பூஜைக்கு அப்படியில்லை. வீடு, நிறுவனம், கடைகளில் சாமி படம், மெஷின்கள், வீட்டு வாசல், கனரக, சிறிய வாகனங்களுக்கு, தொழில் செய்யும் நிறுவனத்தில் பயன்படுத்த செவ்வந்தி பூக்களை வாங்கி செல்வர்.அதனை தொடுக்க தேவைப்படும் நார் விற்பனையும் அதிகரித்தது. வழக்கமான நாட்களில், 50 முதல், 70 ரூபாய்க்கு விற்கும் ஒரு கட்டு வாழை நார் நேற்று, 100 ரூபாய்க்கு விற்றது.வசீகரிக்கும் வண்ண தோரணம்கடைகள், நிறுவனங்களை சுத்தம் செய்து, துாய்மைப்படுத்தி, பெயின்ட் அடிக்கும் பணியை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். சுத்தம் செய்த அறை, நிறுவனங்களை அழகுபடுத்த வண்ண கலர் காதிதம், ஸ்டிக்கர், தோரணம், காகித மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இவை, ஐந்து ரூபாய் முதல், 250 ரூபாய் வரை உயரம், நீளம், அகலத்துக்கு, டிசைனுக்கு ஏற்ப விலை விற்கப்படுகிறது.நேற்று முதல் நாள் என்பதால் எதிர்பார்த்த விற்பனை இன்றும், நாளையும் அதிகளவில் அலங்கார தோரணம் விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், புதுமார்க்கெட் வீதி, தினசரி மார்க்கெட் வீதியில் ஆயுதபூஜை பழங்கள், பொருட்கள் வாங்க ஒரே இடத்தில் கூட்டம் நிறையும். ஸ்மார்ட் சிட்டி பணியால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு தினசரி மார்க்கெட் செயல்படுகிறது.பொரி, காய்கறி, பழக்கடை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் செயல்படுவதால், பூஜை பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் இங்கும்அங்கும் அலைமோதினர்.
பொறி ஒரு படி, பத்து ரூபாய்க்கு விற்றது.விற்பனையை எதிர்பார்த்து, வழக்கமாக ரோட்டோரத்தில் தள்ளுவண்டி கடைகள் அதிகளவில் அமைக்கப்படும். நடப்பாண்டு கூடுதலாக கடைகள் அமைக்கவில்லை. வழக்கமாக இருக்கும் கடைகள் மட்டுமே இருந்தது.இதனால், கூட்டம் அதிகரித்தது காணப்பட்டது.