கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு வரும் 31ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2020 10:10
பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இம்மாதம் 31ம் தேதி ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்ட இக்கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. புராதான சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லிலான நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள உலக அளவில் வியக்கக்கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமியன்று, அரிசியால் சாதம் சமைத்து காலை 9 மணிமுதல் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி மாலை 6 மணியளவில் தீபாராதனை நடைபெறும்.
லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் படைக்கப்படும் அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக இரவு 9 மணி அளவில் வழங்கப்படும். மீதமுள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படும். ஆண்டுதோறும் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடக்கும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார். 36 வது ஆண்டு அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி நாளான வரும் 31ம் தேதி நடக்க இருக்கிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாக தடை காரணமாக ஆண்டுதோறும் நடைபெறுவது போல் இல்லாமல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதியின்றி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு காலை மகாபிஷேகம் மாலை அன்னகாப்பு தீபாராதனை செய்வதற்கு ஏற்கனவே அரசு தெரிவித்துள்ள 12 விதிமுறைகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையே தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.