கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கும்பாசி ஆனைகுட்டேயில் விஷ்ணு ரூபத்தில் விநாயகர் கோயில் உள்ளது. ஒருமுறை மங்களூருவைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவியது. அங்கு வாழ்ந்த முனிவர்கள் அகத்தியரின் உதவியை நாட அவர் தவமிருந்தார். கும்பாசுரன் என்பவன் தவத்திற்கு இடையூறு செய்தான். அவனை அழிக்குமாறு விநாயகரிடம் முறையிட்டார் அகத்தியர். அசுரனை அழிக்கும் சக்தி, பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு இருந்தது. அதற்காக தும்பிக்கையில் ஆயுதம் ஏந்தியபடி யானை வடிவில் தோன்றினார் விநாயகர். அப்போது வனவாசத்தில் இருந்த பீமன், யானை வருவதைக் கண்டு அதைப் பின்தொடர்ந்தான். ஓரிடத்தில் யானை ஆயுதத்தை கீழே நழுவ விட்டு மறைந்தது. அதைப் பயன்படுத்தி அசுரனைக் கொன்றான் பீமன். விநாயகரின் அருளால் மழையும் பொழிந்தது. மகிழ்ந்த முனிவர்கள் இங்குள்ள குன்றில் கோயில் கட்டினர். அசுரனின் பெயரால் இப்பகுதி ‘கும்பாசி’ எனப்பட்டது. ஆனே குட்டே என்பதற்கு ‘யானைக் குன்று’ என்பது பொருள். ஒரே கல்லால் ஆன 12 அடி உயர விநாயகர் நாமம் அணிந்தபடி விஷ்ணுரூபத்தில் இருக்கிறார். இவருக்கு சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்றும் பெயருண்டு. மேலிரு கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியபடி இவர் கீழ்வலது கையால் வரம் அளிக்கவும், கீழ்இடது கையால் சரணடைந்தவரைக் காக்கவும் செய்கிறார். 400 கிலோ அரிசி, 125 தேங்காய்களைப் பயன்படுத்தி விநாயகரை அலங்கரிப்பர். இதற்கு அரிசி கணபதி பூஜை அல்லது ‘மூடுகணபதி பூஜை’ என பெயர். தினமும் வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் உலகம் நன்மைக்காக ‘ரெங்க பூஜை’ என்னும் விளக்கு பூஜை நடக்கிறது. சங்கடஹர சதுர்த்தியன்று துலாபார காணிக்கை செலுத்துகின்றனர். திருமணத்தடை நீங்கவும், வியாபாரத்தில் லாபம் பெருகவும் கணபதி ஹோமம் நடத்துகின்றனர். விலங்குகளுக்காக கார்த்திகை மாதம் பட்சி சங்கர பூஜை நடக்கிறது. எப்படி செல்வது * மங்களூரு- – கொல்லுார் சாலையில் 96 கி.மீ., * உடுப்பியிலிருந்து 30 கி.மீ., * பெங்களூரு-– மங்களூரு சாலையில் 400 கி.மீ., விசேஷ நாள் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்ஸவம் நேரம் அதிகாலை 5:30 மணி – 12:30 மணி; மாலை 4:30 மணி – 9:00 மணி