பதிவு செய்த நாள்
22
நவ
2020
05:11
பழநி - கொழுமம் சாலையில் வலது புறத்தில் இரண்டு மலைகளை காணலாம். ஒன்று பெரிய ஐவர் மலை. மற்றொன்று சிறிய ஐவர் மலை. முன்பு இம்மலை அயிரை மலை என அழைக்கப்பட்டுள்ளது.பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கினர், அர்ச்சுனன் இங்குதான் பாசுபதம் பெற்றான் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
எனவே, பஞ்சபாண்டவர் மலை அல்லது ஐவர் மலை என்றானதாக கூறுகின்றனர்.இங்கு திரவுபதி அம்மன் கோயில், இடும்பன் சன்னதி, வள்ளலார் ஜோதி மண்டபம், குழந்தை வேலப்பர் கோயில், உச்சி பிள்ளையார் கோயில் என ஐந்து கோயில்கள் பல்வேறு உயரங்களில் அமைந்துள்ளன. பெரிய சுவாமி என்ற முனிவரின் சமாதி, நாராயண பரதேசி சமாதி என இங்கு தவம் செய்து ஜீவசமாதியானதும், இவர்கள் தவம் செய்த குகைகளும் உள்ளன. படிக்கட்டு தொடங்குமிடத்தில் உள்ள கல்வெட்டு, மலையின் தொன்மை, சிறப்பு, சமணர் பள்ளிகள், இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு பற்றிய செய்திகளை தாங்கி நிற்கிறது. ஆடி அமாவாசை, கார்த்திகை போன்ற நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். பல சமுதாயத்தினர் திரவுபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு ஆண்டுதோறும் திருவிழா நடத்துகின்றனர்.ஐவர் மலை அமைப்புஐவர் மலை கடல் மட்டத்திலிருந்து 1400 அடி வடக்கு தெற்காக அமைந்துள்ளது. மலை இரு பிரிவுகளாக பிரித்திருப்பது போல் இடைவெளியில் வழியும், வழியின் தெற்கு பகுதி உச்சியில் பிள்ளையார் கோயிலும், வடக்கு திசையில் இராமானுஜர் மடமும், தண்டபாணி கோயிலும் உள்ளன. தெற்கு திசையில் இயற்கையாகவே குகைத்தளம் 16 அடி நீளமும், 13 அடி உயரத்திலும் உள்ளது.இந்த மலையின் உள்பகுதியில் பெரிய குகைகள் இருந்திருக்கலாம். காற்று உள்ளே சென்று வரும் அளவு மலையைச் சுற்றிலும் ஓட்டைகள் உள்ளன. பெரிய குகைகள் மலையைச் சுற்றிலும் உள்ளது. பல குகைகள் அடைபட்டு கிடக்கிறது. இங்கு இன்னமும் சித்தர்கள் உள்ளே இருப்பதாக நம்புகின்றனர்.
சமணர்கள் குகைகள்குகைகளுக்குள்ளே சமணர்கள் வாழ்ந்த கற்படுகைகள் உள்ளன. அதற்கு சான்றாக இங்குள்ள திரவுபதி அம்மன் கோயிலின் வெளிப்பகுதியில், 15 சமண தீர்த்தங்கரர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.சமண துறவிகள் ஐவர் மலையில் தங்கி சமணப் பள்ளிகளை துவக்கி தவ வாழ்வை மேற்கொண்டுள்ளனர். குகை பகுதிகள் இயற்கை பாதுகாப்புடன் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் நீர் புகாதவாறு, காற்றோட்டத்துடன் வெளிச்சமாக உள்ளது.இம்மலையில் புஷ்கரிணிகள் எனப்படும் 2 சுனைகள் உள்ளன. ஒன்று தாமரை மலர்களுடன், மற்றொன்று அல்லி மலர்களுடன் உள்ளது. சூரிய கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திர கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியாக அமைந்துள்ளது.
நாரயணபரதேசி என்பவர் 100 வருடங்களுக்கு முன்பாக வந்து இங்கேயே முக்தியடைந்து உள்ளார். பெரிய சுவாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா கற்பித்து இங்கேயே முக்தியடைந்துள்ளார்.ஐவர்மலையில் இன்றுதற்போது திரவுபதி, முருகன், இராமலிங்க அடிகள் வழிபாடுதான் சிறப்பாக உள்ளது. இவ்வட்டாரத்தில் உள்ளவர்கள் திருமணங்களை இங்குதான் நடத்துகின்றனர். சிவராத்திரி விழாவும் ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கிறது. அதற்கு வேண்டிய பொருளுதவி பக்கத்து ஊர்மக்களாலும், பாப்பம்பட்டி ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் செய்து கொடுக்கின்றனர். ஐவர் மலைக்கு செல்ல வசதியான சாலை இல்லை. முன்பு பஸ் வசதி இருந்தது. தற்போது அதுவுமில்லை. இதனை சுற்றுலாத் தலமாக மாற்றினால், எழில் கொஞ்சும் இயற்கை வளங்களுக்கு நடுவே உள்ள இம்மலை பயணிகளை அதிகம் கவரும் என்பதில் ஐயமில்லை. செய்தி -ஆறுமுகப்பாண்டி படம் - மணிகண்டன் வெளிநாட்டவர் வருகைகோயில் பூசாரி பழனிச்சாமி கூறியதாவது: சமணர் இங்கு தங்கி பள்ளிச்சாலை நடத்தியதாகவும், சித்தர்கள் இன்றும் வாழ்வதாகவும் பலரும் கூறுகின்றனர். தமிழகம், கேரளா பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டவரும் இங்கு தியானம் செய்வர்.