பதிவு செய்த நாள்
16
டிச
2020
02:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று(16) முதல், நடை திறப்பு நேரம் மாற்றப் பட்டுள்ளது. சூரியன், தனூர் ராசியில் இருக்கும், மார்கழி மாதம் முழுவதும், புனித நாட்களாக கருதப்படுகிறது.
இந்நாட்களில், சிவன் கோவில்களில், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, வைஷ்ணவ கோவில்களில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை பாடி, பக்தர்கள் வழிபடுவர். சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம், வைஷ்ண கோவில்களில், வைகுண்ட ஏதாதசி நடக்கும். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வழக்கமாக, அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். ஆனால், கொரோனா ஊரடங்கால், கடந்த செப்., மாதம் முதல், 6:30 மணிக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், மார்கழி மாதத்தை முன்னிட்டு, இன்று(16) முதல், அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை, நடராஜர் சன்னதியில் திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும். அதிகாலையிலேயே பக்தர்கள், கோவிலிற்கு வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்து வழிபடுவர். திருவெம்பாவையை, மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் இயற்றினார். இதனால், கிரிவலப்பாதையில், அடி அண்ணாமலை கிராமத்திலுள்ள, மாணிக்கவாசகர் கோவிலில், தினசரி சிறப்பு பூஜை நடக்கும்.