பதிவு செய்த நாள்
16
டிச
2020
02:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பகல்பத்து உற்சவத்துடன், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. திவ்ய தேசங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என போற்றப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, நேற்று முன்தினம் துவங்கி, ஜனவரி, 4ம் தேதி வரை நடக்கிறது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, திருநெடுந்தாண்டகம் நடந்தது. வரும், 24ம் தேதி வரை நடைபெறும் பகல்பத்து உற்சவம், துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு, உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் புறப்பட்டு, 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கம் அலங்காரத்தில், நம்பெருமாள் எழுந்தருளினார்.மாலை, 6:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு, 9:45 மணிக்கு, மூலஸ்தானம் சென்றடைந்தார். ஏகாதசி பெருவிழா துவங்கியதை முன்னிட்டு, ஸ்ரீரங்கமே விழாக்கோலம் பூண்டுள்ளது.