பதிவு செய்த நாள்
18
டிச
2020
04:12
சென்னை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சாந்தோம் பழண்டியம்மன் கோவில்களுக்கு சொந்தமான, 66.79 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், நேற்று அதிரடியாக மீட்கப்பட்டன.சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், சர்வே எண், 3,894ல், மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 29 கிரவுண்டு நிலம் உள்ளது.இதனை, ஆண்டிற்கு, 450 ரூபாய் வீதம் குத்தகை அடிப்படையில், 1972ம் ஆண்டு முதல், 25 ஆண்டுகளுக்கு, நேஷனல் கவுன்சில் ஆப் உமன்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு விடப்பட்டது.குத்தகை காலம், 1996ல் முடிந்தது. இதையடுத்து, அந்த இடத்தை சுவாதீனம் பெற, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டது.அந்த தீர்ப்பை எதிர்த்து, அந்நிறுவனம் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நிலம் ஒப்படைக்காத காலத்தை, ஆக்கிரமிப்பாக கருதப்பட்டது.அக்காலத்திற்கான வாடகை பாக்கியாக, 66 ஆயிரம் ரூபாயை, 1999ம் ஆண்டில் இருந்து, 2005ம் ஆண்டிற்குள் மாதம், 2,000 ரூபாய் பெறவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து, தொடர்ந்த இரண்டாவது மேல்முறையீடும் தள்ளு படி செய்யப்பட்டது. கடந்த, 2012ல் அந்த இடத்தில், 11 கிரவுண்டு இடம் சுற்றுச்சுவர் எழுப்பி, கோவில் வசமாக்கப்பட்டது.மீதமுள்ள நிலமும், அந்நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்தது. அதில், 10 கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட்டிருந்தனர்.இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கோவிலுக்கு சொந்தமான மொத்த நிலமும், இணைக் கமிஷனர் காவேரி தலைமையில் கையகப்படுத்தப்பட்டது. அவற்றின் தற்போதைய மதிப்பு, 55 கோடி ரூபாய்.அதே போல, பழண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம், சென்னை, சாந்தோம் சாலை, நடுக்குப்பத்தில், 8,800 சதுர அடி உள்ளது. வாடகை எடுத்தவர் உரிய காலத்திற்கான வாடகை பாக்கி, 1.94 கோடி ரூபாய் செலுத்தவில்லை.இது தொடர்பாக, அறநிலையத் துறை இணைக் கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் படி, வாடகைதாரர் ஆக்கிரமிப்பாளராக கருதப்பட்டார்.உதவிக் கமிஷனர் கவெனிதா, செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதி தாசன் முன்னிலையில், கோவில் நிலம் மீட்கப்பட்டது. அதன் மதிப்பு, 11.79 கோடி ரூபாய்.