கலியுகம் பிறந்துவிட்டது. அதன் விளைவாக வைகுண்டக் காவலர்கள் அதனுடைய வாசலை மூட எத்தனித்தார்கள். இதை அறிந்துகொண்ட திருமால், அவர்களைக் கூப்பிட்டனுப்பி ஒன்றுமறியாதவர் போல, ஜய விஜயர்களே, இதென்ன விந்தை! எதற்காக வைகுண்ட நுழைவுக் கதவுகளைச் சார்ந்த வேண்டும்? என்று கேட்டார். திருமாலின் திருவாக்கில் வெளிப்பட்ட கேள்வியைக் கண்டு சற்றே திணறிய வாயிற்காவலர்கள். மகா பிரபோ! கலியுகம் ஆரம்பமாகிவிட்டதால், தங்கள் இல்ல வாசலை சாத்துவதுதானே தர்மம்! அதைத்தான் செய்தோம் என தயக்கத்துடன் பதிலளித்தனர்.
இதைக் கேட்டு முறுவலித்த மாலவன், தர்மம் தழைப்பதற்கு தர்மங்களைக் கடைப்பிடிப்போர், பக்தி பூண்டோர் அவசியம். இத்தகையோர் இன்னும் அழியாத நிலையில் வைகுண்டவாசலை மூடாமல் திறந்து வைத்திருத்தலே சிறந்தது. தர்மம் இன்னும் உள்ளது. எனவே, தர்ம நெறிப்படி வாழ்ந்து முடித்து என்னிடம் வரும் முக்தர்களுக்கு வழிவிடும் வகையில் பரமபத வாசலை நன்கு திறந்தே வையுங்கள் எனக் கூற காவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வு, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியாக வரும் வைகுண்ட ஏகாதசித் திருநாள் ஒன்றில்தான் நிகழ்ந்தது எனப் புராண வாயிலாக அறிகிறோம். முக்கிய வைணவத் தலங்களில் உள்ள பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் இடம்பெறும் இந்தப் பரமபத வாசல் திறப்பு வைபவம். மிகுதியாக வடக்கு-தெற்கு திக்கிலேயே அமைந்திருக்கும்.
திருவரங்கத்தில் பரமபத வாசலுக்கு முன் காணப்படும் மண்டபத்தில், பெருமாளின் திருப்பாத தரிசனம் காட்சியாகும். அதன் எதிரே நம் கைவிரல்களைப் பொருத்துவதற்கு வசதியாக ஐந்து குழிவான பள்ளங்கள் இருக்கின்றன. அவற்றில் நம் கைவிரலைப் பொருத்தியவாறே எதிரே உள்ள பரமபத வாசலைப் பார்க்கவேண்டும். இதை ஐந்து குழி மூன்று வாசல் தரிசனம் என்கிறார்கள். நம் ஐம்புலன்களையும் அடக்கி மும்மலங்களையும் விட்டால், பரமபதம் கிட்டும் என்பதே இதன் ஐதீகம்.
திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பெரிய திருவிழா வைகுண்ட ஏகாதசி. அன்று பெரிய பெருமாள் முத்தங்கி பூண்டும், உத்ஸவப் பெருமாள் வஜ்ராங்கி அணிந்தும் தரிசனம் தருவார். இது காணவேண்டிய காட்சியாகும்! காஞ்சி மண்டலத்திலுள்ள திவ்ய தேசங்களில் அஷ்டபுஜம் எனும் திவ்யதேசத்தில் மட்டுமே பரமபத வாயில் உண்டு. துவாரகாவில் துவாரகீஷ் ஆலயத்தின் உள்ளே வருபவர்கள் சொர்க்க துவாரம் வழியே வந்து, மோட்ச துவாரம் வழியாக வெளியே போக வேண்டும். இப்படி துவாரங்கள் இருப்பதால், காரணப்பெயராக அது துவாரகை என்றானது.