நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாட்டம் கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது. இதனால் கடற்கரை சாலைகள் அடைக்கப்பட்டன. சேவியர் திறந்தவெளி திடலில் தேவாலய அதிபர் பிரபாகர் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு சிறப்பு திருப்பலி துவங்கியது. சமூக இடைவெளியுடன் அதிகாலை 1:45 வரை நடந்தது. 25 பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. குத்து விளக்கை ஏற்றி பேராலய அதிபர் பிரபாகர் திவ்ய நற்கருணை வழங்கி, 2021 ம் ஆண்டை வரவேற்று நற்செய்தி அறிவித்தார். 2021ம் ஆண்டு எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல், கொரோனா தொற்று நீங்கி, நாட்டுமக்கள் செழுமையாக வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. புத்தாண்டு பண்டிகையால் வேளாங்கண்ணி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.