பதிவு செய்த நாள்
03
ஜன
2021
10:01
திருப்பூர்; பழநி கோவிலுக்கு, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், பாதுகாப்பு கருதி, இரவு பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், பெரும்பாலும், திருப்பூர் மாவட்டம் வழியாகவே செல்கின்றனர். இவர்கள், தேசிய நெடுஞ்சாலை ஓரமே நடந்து செல்கின்றனர். பகலில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், பெரும்பாலானோர் இரவு பயணம் மேற்கொள்கின்றனர்.போலீசார் கூறியதாவது:காலநிலை மாற்றத்தால், அதிகளவில் பனி மூட்டம் தென்படுகிறது.
இதனால், இரவு நேரத்தில், ரோடு, வாகனங்கள் எளிதில் புலப்படுவதில்லை. எனவே, இரவு நேர பயணத்தை தவிர்த்து, பகலில், பாதயாத்திரை செல்ல வேண்டும்.குறிப்பாக, ரோட்டின் இடப்புறம், கூட்டமாக செல்லாமல், ஒருவர் பின் ஒருவராக வரிசையில் செல்ல வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால், இரவு பயணம் மேற்கொள்வோர், இரவில், சிவப்பு அல்லது மஞ்சள் நிற ரிப்ளக்டர் ஸ்டிக்கர் கொண்ட மேலாடை, தொப்பி, வாக்கிங் ஸ்டிக், தோள் பை அணிந்து வந்தால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க முடியும்.அதேபோல், உடைமைகள் எடுத்து செல்லும் வாகனங்களின் முன்புறம் வெள்ளை, பின்பகுதியில் சிவப்பு ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். பாதயாத்திரை பாதுகாப்பானதாக இருக்க, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர். பக்தர் ஒருவர் பலிஈரோடு மாவட்டம், அந்தியூர், கெம்மியம்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 22. தனது நண்பர்களுடன் பழநிக்கு, பாத யாத்திரையாக ஈரோட்டில் இருந்து புறப்பட்டு காங்கயம், தாராபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார். நேற்று, காங்கயம் தாராபுரம் ரோடு துண்டுக்காடு பகுதியில் ரோட்டோரம் நடந்து சென்ற போது, அவ்வழியாக சென்ற லாரி, நவீன்குமார் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.