பதிவு செய்த நாள்
04
ஜன
2021
03:01
குன்னூர்: குன்னூர் கிராமத்தில் படுகரின் மக்களின் பாரம்பரிய கன்னி ஹெத்தையம்மன் திருவிழா, காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியுடன், கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் டிச., ஜன., மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதில், 8 ஊர்களை சேர்ந்த ஜெகதளா ஆறூர் மக்களால் கொண்டாப்படும், இந்த பண்டிகையில், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர்; காரக்கொரையில் பூ குண்டம் இறங்கினர். கன்னி ஹெத்தையம்மன் கோவில், அமைந்துள்ள ஜெகதளாவில், பண்டிகை கொண்டாடப்பட்டது.
கோவிலில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது. மடியரை என அழைக்கப்படும் பாறை ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, கொட்டும் மழையில் துவங்கிய அம்மன் ஊர்வலத்தில், ஹெத்தை தடியுடன், ஹெத்தைக்காரர்கள் ஊர்வலமாக ஜெகதளா வந்தனர். இதில், குடைகள் புடைசூழ, ஆடல் பாடல்களுடன் ஹெத்தையம்மனை பூசாரி தனது தலையில் சுமந்தவாறு, வந்தது, பக்தர்களை பரவசப்படுத்தியது. வரும் வழியில் வேட்டிகளை விரித்து, அதன் மீது ஹெத்தைக்காரர்களை நடக்க வைத்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கொரோனா காரணமாக விழா எளிமையாக நடந்தது.