பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
பொங்கல் திருநாள், நேற்று, அன்னுார், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சூலுார் வட்டாரப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அன்னுார், காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை கோவில் வளாகத்தில், கோவில்பாளையம், ஊட்டி, அன்னுார் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து பெருமாளை வழிபட்டனர்.
கரிவரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் கும்மியடித்தல் நடந்தது.* அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த பொங்கல் விழாவில், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், எஸ்.ஐ.,க்கள், மும்மதங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் சமத்துவ பொங்கல் விழாவில், பெண்கள் கும்மியடித்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு பொங்கல் வழங்கினர்.பேட்டைமாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஜடையம்பாளையம் ஊராட்சி உட்பட்ட, ராமம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில், பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.சூலுார்* அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மற்றும், கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்த பொங்கல் விழாவை, கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி துவக்கி வைத்தார்.கும்மியாட்டம், உறியடித்தல், கரகாட்டம், பரதநாட்டியம், சிலம்பம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஊஞ்சப்பாளையம் காவடி குழுவின் காவடியாட்டம் உட்பட பாரம்பரியத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.முதன்மை செயலாளர் நடராஜன், பொறியியல் கல்லுாரி முதல்வர் அகிலா, கலைக்கல்லுாரி முதல்வர் பாலுசாமி மற்றும் பேராசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.சூலுார் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சி தி.மு.க., மற்றும் சூலுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பொங்கல் விழா நடந்தது. நகர பொறுப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் கொடியேற்றி வைத்து இனிப்புகள் மற்றும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினார். மாவட்ட இலக்கிய அமைப்பாளர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.பெ.நா.பாளையம்* பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனங்கள், ரோட்டரி கோவை எலைட் அமைப்பு சார்பில் நடந்த பொங்கல் விழாவில், கோலப்போட்டி, இசை நாற்காலி, லக்கி கார்னர், உறியடித்தல், சிலம்பம், வேல் கம்பு சுற்றல், கரகம், ஒயிலாட்டம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.பொங்கல் மற்றும் ரங்கோலி கோலப்போட்டிகளில் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் சண்முகம், ரோட்டரி கோவை எலைட் தலைவர் அமிர்தகடேஸ்வரன் பரிசு வழங்கினர். யுனைடெட் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.* பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கனுார் லட்சுமி நரசிம்மர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர் கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பெருமாள் திருவீதியுலா நடந்தது. சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், துடியலுார், கவுண்டம்பாளையம், சின்னதடாகம் உட்பட பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில்,பக்தர்கள் பங்கேற்றனர் -நிருபர் குழு-.