பதிவு செய்த நாள்
28
ஜன
2021
03:01
அன்னூர்: அன்னூர் மற்றும் கோவில்பாளையத்தில், முருகன் கோவில்களில், தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு, எல்லப்பாளையம், பழனியாண்டவர் கோவிலில், அதிகாலையில், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பழனி ஆண்டவர் குழந்தை வடிவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவரான, வள்ளி, தெய்வானை சமேதர முருகப்பெருமான் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வாரணாபுரம், பழனி ஆண்டவர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சாலையூரிலிருந்து பால்குடம் மற்றும் 108 காவடிகளுடன் பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். குன்றின் அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் தீர்த்தம் எடுத்து, இடும்பன் கோவிலில் வழிபட்டு, கோவில் வளாகத்தில் காவடிகளையும், பால்குடங்களையும் சமர்ப்பித்தனர். உச்சிகால பூஜை நடந்தது. பாரம்பரிய முறையில் பெண்கள் மடிசோறு கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. சித்தர் சின்னச்சாமி உள்பட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் சன்னதியில், கால சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலித்தார். அன்னூர் வட்டாரத்தில் உள்ள கோவில்களில், முருகப்பெருமான் சன்னதிகளில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.