பதிவு செய்த நாள்
31
ஜன
2021
10:01
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் மகாலட்சுமி கோயிலில் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலய நிர்மாண நிதி சேகரிப்பு பணி தொடக்கம் தொடர்பான சிறப்பு பூஜை நடந்தது.
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த, 2019ம் ஆண்டு, 14,000 சதுர அடி நிலம் குழந்தை ராமருக்கு சொந்தமானது என சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, மத்திய அரசு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திரம் அறக்கட்டளையை நிறுவி, கையகப்படுத்திய நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது. இதில், சுமார், 2.70 ஏக்கர் பரப்பில், 57 ஆயிரத்து, 400 சதுர அடியில், 360 அடி நீளம், 235 அடி அகலம், 5 மண்டபங்கள், மூன்று நிலைகளுடன் பிரம்மாண்டமாக ராமர் கோவில் அமைய உள்ளது. இங்கு நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம், ஆராய்ச்சி மையம், கல்விக்கூடம், வேதபாடசாலை, சத்சங்க அரங்கம், பிரசாத விநியோக பகுதி, நிர்வாக அலுவலகம், திறந்தவெளி அரங்கம் தங்குமிடம், சிறப்பு விருந்தினர் விடுதி, கண்காட்சி உள்ளிட்ட பகுதிகள் அமைய உள்ளன.
ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஆலய நிர்மாணப் பணியில், அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை பொதுமக்களிடம் நிதி பெற முடிவு செய்துள்ளது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், ராமர் கோவிலுக்காக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை நரசிம்மநாயக்கன்பாளையம், மகாலட்சுமி கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், பா.ஜ.க., கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் யோகேஷ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.