பதிவு செய்த நாள்
19
ஜூன்
2021
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது. கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதாவது: உற்சவர் சிலைகள் குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் தெரிவித்துள்ளோம். சிலைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். வெண்கலமா, தங்கமா என, ஆய்வுக்குழுவினர் ஆய்வு நடத்திய பிறகே தெரியவரும். ஊரடங்கு காரணமாக, ஆய்வு பணி சற்று தாமதமாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.