பதிவு செய்த நாள்
14
அக்
2021
10:10
நவராத்திரி 9 நாட்களுக்குப் பின் 10-வது நாளை விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். விஜய என்றால் வெற்றி என்று பொருள். அன்றைய தினத்தில் அட்சராப்யாசம் - துவக்கக் கல்வி, அன்னப்ரசன்னம் -- குழந்தைக்கு முதன்முதலாக சோறுட்டுவது போன்றவற்றைத் துவங்குவது சிறப்பு.
காலரூபிணியான அம்பிகைக்கு லலிதா சகஸ்ரநாமத்தில், விஜயா என்ற நாமம் உண்டு. புரட்டாசி மாத சுக்ல பட்ச தசமியன்று, அதாவது - விஜய தசமியன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்றும் நேரத்துக்கு விஜயா என்று பெயர். அந்த நேரத்தில் துவங்கும் சகல காரியங்களும் வெற்றி பெறும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
விஜய தசமியில் தான் ராமன் அம்பெய்தி ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரை மாய்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது வன்னிமர பொந்தில் தங்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்து, பின்னர் அவற்றை வெளியே எடுத்து விஜய தசமியில் தான் பூஜை செய்தனர் எனப்படுகிறது.
வனவாசத்தின் போது ஸ்ரீதுர்கா நக் ஷத்திரமாலா துதியை பாண்டவர்கள் ஜெபிக்க, தேவியின் அருளும், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் ஆசியும் அவர்களுக்குக் கிடைத்தன.
அஞ்ஞானவாசம் முடிந்த பின், வன்னி மரபொந்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்து, அம்மரத்தடியில் வைத்து 9 நாட்கள் வழிபட்டு 10-ம் நாளான விஜய தசமியில் எடுத்துக் கொண்டனர். விஜயனால் பூஜிக்கப்பட்டதால் விஜய தசமி என்றும் வன்னி நவராத்திரி மற்றும் வன துர்கா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. விஜய தசமியன்று வன்னிமரத்தை 21 முறை பிரதட்சணம் செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.இன்றைய நாளில் புதிதாக கல்வி, கலைகளை கற்க துவங்க ஏற்ற நாள். இன்றைய தினம் குருவை சந்தித்து வணங்கி, ஆசி பெறுவது அவசியம். கொலு பொம்மைகளை இன்றிரவு பால் நிவேதனம் செய்து, படுக்க வைத்து விடவேண்டும்.
மறுநாள் கற்பூரம் ஏற்றி, மங்கள ஆரத்தி காட்டி பூஜை செய்து, பொம்மைகளை எடுத்து பத்திரப்படுத்தலாம்.
மஹா கவுரி
சரஸ்வதி துதி பாடல்:
வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத்திலிருப்பாள்
உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட் பொருளாவாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோவில்
ஈதனைத்தின் எழிலிடையுற்றாள்
இன்பமே வடிவாகிட பெற்றாள்.
(வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்)
மலர்கள்
முல்லை, மல்லிகை, வெண்தாமரை, சிவப்பு தாமரை.
இன்றைய கோலம்
காவியிட்ட அரிசி மாவுக்மணைக்கோலம்.
பால் பாயசம்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அல்லது பச்சரிசி - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 3 கப்
பாதாம், முந்திரி - தலா - 6
குங்குமப்பூ - சிறிது
ஏலக்காய் துாள் - சிறிது
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கன்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: அரிசியை தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அரை வேக்காடில் வேக வைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில் வெந்த அரிசியை சேர்த்து நன்கு கலக்கவும். குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்க்கவும்.பாலில் சாதம் நன்றாக வெந்து, இறுகி வந்ததும், அத்துடன் சர்க்கரை, நெய், வறுத்த பாதாம், முந்திரி ஏலக்காய் துாள், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும். பால் பாயசம் தயார்!
நைவேத்தியம்
சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், உளுந்து வடை, பால் பாயசம்.
உளுந்து வடை
தேவையான பொருட்கள்:
உளுந்தம்பருப்பு - 250 கிராம்
பச்சை மிளகாய் - 6
மிளகு - -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைக்க வேண்டும். அரைத்த மாவை சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்க வேண்டும்; அதுவே சரியான பதம். கடைசி சுற்றில் உப்பு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கறிவேப்பிலையை நறுக்கி சேர்த்து, நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை வடைகளாகத் தட்டி, மிதமான தீயில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.