பதிவு செய்த நாள்
26
அக்
2021
05:10
அவிநாசி: கோவில் நிலம் ஏலம் தொடர்பான அறிவிப் முறையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்துசமய அறநிலைய துறை அமைச்சருக்கு மனு வழங்கப்பட்டுள்ளது.
இந்து பரிவார் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில், மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு; திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, அருள்மிகு திருமூலநாத சுவாமி திருக்கோவிலுக்கு உட்பட்ட அருள்மிகு மாதேஸ்வர் கோவில் வளாகத்தில் உள்ள தேங்காய் கடை உள்ளிட்ட சில கடைகள் முதன் முறையாக ஏலம் விட கருத்து கேட்கப்பட உள்ளதாக கடந்த மாதம், 24ம் தேதியிடப்பட்ட அறிவிப்பு, இம்மாதம், 24ம் தேதி மதியம் கோவில் முன் சிறியளவில் ஒட்டபட்டது. கோவில் செயல் அலுவலர் கையெழுத்து, கோவில் முத்திரை இல்லாத அந்த நோட்டீசில் இருந்து எழுத்துக்கள், அன்று பெய்த மழையில் அழிந்துவிட்டன. 30 நாட்களுக்கு முன் ஒட்டப்பட வேண்டிய நோட்டீஸ், மூன்று நாட்களுக்கு முன்புதான் ஒட்டப்படுகிறது. இதனால், இந்த ஏலம் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுத்தல் படிதான் நடத்தப்படுகிறதா, என்ற சந்தேகம் எழுகிறது.
அனைத்து மக்களுக்கும் தெரியும் வகையில் ஏல அறிவிப்பு செய்யப்படவில்லை. கோவில் இணையதளத்திலும் வெளியிடப்படவில்லை. ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கடை வளாகம் எதுவும் கட்டப்படவில்லை. முறையாக கடை வளாகம் கட்டப்பட்டு, மின் இணைப்பு, குடிநீர் வசதி, பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்ட பின், முறையான ஏல அறிவிப்பு மூலம், ஏலம் விட அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்டெடுப்பதன் மூலமும் கோவிலுக்கான வருமானம் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.