பதிவு செய்த நாள்
27
அக்
2021
01:10
நாமக்கல்: அரங்கநாதர் கோவில் மரத்தேர் சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில், கி.பி., 8ம் நூற்றாண்டில், அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு சுவாமி, அனந்த சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான மரத்திருத்தேர் உள்ளது. அவற்றை சீரமைப்பதற்கு தமிழக அரசு, 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, கோவில் மரத்தேர் சீரமைப்பதற்கான மராமத்து பணி நேற்று தொடங்கியது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மரத்தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. எம்.பி., ராஜேஷ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், கோவில் கண்காணிப்பாளர் உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.