பதிவு செய்த நாள்
04
நவ
2021
12:11
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி அவரது வாழ்த்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
தீபாவளி
திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தீபத்திருவிழா உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரவேண்டும்
என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இன்று மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகள் கோவிட் பாதிப்பால் மிக சிறப்பாக கொண்டாடப்படவில்லை. தற்போது கோவிட் வெகுவாக குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் ;
தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தீமையின் மீது நன்மையும், இருளை ஒழித்து ஒளியும் வெற்றி பெறும் பண்டிகை தீபாவளி. நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பண்டிகையை தூய்மையான மற்றும் பாதுகாப்பான முறையில் கொண்டாடி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக கவர்னர் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள் நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாளாகும். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் ஏடுத்தியம்புகிறது. அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிர செய்யட்டும். இந்த தீபாவளி நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும் ஒற்றுமையையும் வளமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தீபாவளி திருநாளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவட்டும், மக்கள் நல்ல ஆரோக்கியம், வளம் பெற்று வாழ வாழ்த்துகிறோம் என தெரிவித்துள்ளனர்.
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் தினகரன் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.