பதிவு செய்த நாள்
04
நவ
2021
12:11
சென்னை:வெளிநாட்டிற்கு கடத்த திட்டமிடப்பட்ட, 500 ஆண்டு பழமையான கணபதி சிலையை, சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக வந்த பார்சல்களை, விமான நிலைய சுங்கத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, காஞ்சிபுரத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு உலோக சிலையை அனுப்புவதற்காக, சுங்கத்துறை அனுமதி கேட்டு, ஒரு விண்ணப்பமும், அந்த சிலைக்கான மாதிரியாக சிறிய சிலை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆய்வு செய்த போது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சுங்கத் துறையின் தனிப்படையினர், காஞ்சிபுரத்தில் குறிப்பிட்டிருந்த அந்த முகவரி வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.
அங்கு, 5.25 அடி உயரத்தில், 130 கிலோ எடையில் உலோக சிலை இருந்தது. அது புதிய சிலை இல்லை என்றும், மிகவும் பழமையானது என்றும் தெரிய வந்தது. சுங்கத் துறையினர் சிலையை பறிமுதல் செய்து, விமான நிலைய சுங்கத்துறை அலுவலகம் கொண்டு வந்தனர். மேலும், பழங்கால சிலையை ஆய்வு செய்யும் தொல்லியல் துறைக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சிலையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிலை, 500 ஆண்டுகளுக்கு முந்தையது என தெரிய வந்தது.
பல கோடி ரூபாய்: இந்தச் சிலை, காஞ்சி புரத்தில் உள்ள மிகப் பழமையான கோவிலில் இருந்திருக்கலாம். அதை தற்போது வெளிநாட்டிற்கு பல கோடி ரூபாய்க்கு விற்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் சிலையை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்ட ஏஜன்சி, சிலை வைக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் வீட்டின் உரிமையாளர் உட்பட பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.