பழநி: பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியிறக்குதலுடன் நிறைவு பெற்றது.
பழநியில் தைப்பூசத் திருவிழா, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் ஜன.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஜன.17ல் வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி, திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று நடக்கவிருந்த வெள்ளி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஜன.,18ல் மாலை சிறுதேரில் சுவாமி தேரோட்டம் கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. திருவிழாவில் அனைத்து நாட்களிலும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் திருஉலா நடைபெற்றது. பத்தாம் நாளான (ஜன.21) நேற்று பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவுடல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக குளத்தில் தெப்பத்தேர் நிகழ்ச்சி சிறப்பு தீபாரதனை அலங்காரத்துடன் நடைபெற்றது. இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச உற்சவம் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவிட்-19 பரவல் கட்டுபாடுகளின் படி பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.