ராஜபாளையம்: மதுரையிலிருந்து திருமங்கலம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், கடையநல்லுார், குற்றாலம் வரையிலான பகுதிகளில் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வரலாற்று புகழ்மிக்க கல்துரண் மண்டபங்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிதைந்து வருவது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லுாரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் கந்தசாமி கூறியது: 17ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென் பகுதியை ஆட்சி செய்த மதுரை நாயக்க மன்னர்களில் சிறந்து விளங்கியவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையில் இருந்து குற்றாலம் வரையிலும், அதேபோல் திருநெல்வேலி வரையிலும் பல இடங்களில் கல் மண்டபங்கள் மற்றும் தங்கும் சத்திரங்களை கட்டினார். அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட பயணத்தின் போது இந்த கல் மண்டபங்கள் சத்திரங்கள் தங்கி இளைப்பாறினர். மேலும் திருமலை நாயக்கர் ஆட்சி புரியும் போது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், குற்றாலநாதர் கோயில் போன்ற கோயில்களில் உச்சிகால பூஜை முடிந்த பிறகு மதிய உணவு வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் மதுரையில் இருக்கும் போது கோயில்களில் பூஜை நடைபெறுவது மணியோசை கொண்டு அறிந்துகொள்ள வழிநெடுக கல் மண்டபங்கள் கட்டிடங்களை கட்டி வைத்தார். பூஜையை தொடங்கியவுடன் கல் மண்டபங்களில் அமைக்கப்பட்ட மணிகளை ஒவ்வொரு மண்டபங்களில் இருந்து வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கச் செய்து பூஜை தொடங்கியது அறிந்து கொண்டார். எனவே கல் மண்டபங்கள் மணிமண்டபங்கள் எனவும் அழைக்கப்பட்டன. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள், பெரும்பாலான இடங்களில் சிதைந்து காணப்படுகின்றன.அவற்றில் பல மண்டபங்கள் அழியும் தருவாயில் உள்ளன.இன்னும் பல மண்டபங்கள் வர்த்தக கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. சிலவற்றில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. சிறப்பாக அமைக்கப்பட்ட கல் மண்டபங்களில் எனண்பட்டை கோணங்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தூண்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. தற்போது இவற்றில் பல தூண்கள் சரிந்த நிலையில் முட்புதர்கள் சூழப்பட்டு காணப்படுகிறது. கல் மண்டபங்கள் சில காலங்களுக்குப் பின் அறைகளாக உருவாக்குவதற்கு செங்கல் கட்டுமானங்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த செங்கல் கட்டுமானங்கள் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இத்தகைய கல்துாண் மண்டபங்களை பாதுகாப்பதற்காகவும், நமது ஊரின் பெருமையும் பாரம்பரிய சின்னத்தின் முக்கியத்துவம் பிற்கால சந்ததியினருக்கு அறிந்துகொள்ளும் வகையில் நாம் ஏற்பாடு செய்யவேண்டும். நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரைக்கு முக்கிய வழித்தடமாக இருந்த இப்பகுதி வரலாற்றை பாதுகாக்க முன்வரவேண்டும், என்று பேராசிரியர் முனைவர் கந்தசாமி கூறினார்.