மயிலாடுதுறை: திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது இதில் நான்கு ஆதீன குருமகா சன்னிதானங்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்தின் அணிகொண்ட கோதை அம்பாள் சமேத முல்லைவன நாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று காலை ஆறாம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.
தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீன 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகாசன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியர்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் சிதம்பரம் மௌனகுரு சுவாமிகள், தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் ஆதினங்களின் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன திருக்கோவில்கள் தலைமை கண்காணிப்பாளர் மணி, கோவில்கள் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.