திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் திருப்பள்ளி ஓடம் (தெப்பத் திருநாள்) உற்சவம் இன்று (4ம் தேதி) துவங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தெப்ப உற்சவம் மாசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை கடைசி நாளாகக் கொண்டு ஸ்ரீநம்பெருமாள் தெப்பத் திருநாள் 9 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
பாண்டியர்கள் காலத்தில் தெப்பத்திருநாளானது எம் மண்டலங்கொண்டு கோயில் பொன்மேய்ந்த பெருமாள் சுந்தர பாண்டிய தேவர் கைங்கர்யமாக அவர் பெயரிலே நடைபெற்ற திருநாளான சித்திரைத் திருநாளுக்குத் திருக்காவிரி நீர்பாய்ச்சி அதிலே முத்தும், பவளமும் கட்டின திருக்காவணமும் கட்டுவித்து ஊருணியிலே திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணி நிறுத்தி அதிலே நாச்சிமார்களுடேனே ஸ்ரீஅழகிய மணவாளனை எழுந்தருளச் செய்து தெப்போத்ஸவம் நடைபெற்றது. இவ்வாறு நடைபெற்ற இந்த விழாவானது பிற்காலத்தில் ஆடிப் பதினெட்டாம் நாள் அன்று திருக்காவிரியில் திருப்பள்ளி ஓட உத்ஸவமாக நடைபெற்று வந்தது.
அவ்வாறு ஒரு ஆண்டு நம் பெருமாள் உபய நாச்சிமார்களோடு திருப்பள்ளி ஓடத்திலே எழுந்தருளித் தெப்பத் திருநாள் கண்டருளுகையில் துர்மந்த்ரங்களை ப்ரயோகித்தவர்களுடைய (மாந்த்ரீகர்களுடைய) அடாத செயலால் தெப்பமானது திருக்காவிரியில் எற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட, அச்செய்தியைக் கேட்டு, கூரநாராயண ஜீயரும் தம்முடைய வலது திருக்கரத்தில் அணிந்திருந்த திருப்பவித்திரத்தை வலமாகத் திருப்ப நம்பெருமாள் திருப்பள்ளி ஓடமும் காவிரி வெள்ளப் பெருக்கினை எதிர்த்து நிலை கொண்டிற்று. நாச்சிமார்களும் ஸ்ரீஅழகிய மணவாளனும் எவ்வித ஆபத்துமின்றி ஆஸ்தானம் சென்றடைந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறது கூரநாராயணஜீயர் மந்திரவாதிகளுடைய அக்கிரமச் செயல்களுக்கு இடம் கொடாதபடி கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டுவித்து அதிலே திருப்பள்ளி ஓடத் திருநாள் நடத்தும்படி பண்ணுவித்தார். அந்தச் செயலைப் போற்றும் வண்ணம் தெப்பத் திருநாளிலில் விட்டவன் விழுக்காடு (ஸ்ரீ நம்பெருமாளுக்கு அமுது செய்த பிரசாதம்) ஸ்ரீ ரங்கநாரயணஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு, கந்தாடை ராமானுஜமுனி காலத்தில் (கி.பி 1489) அடையவளைந்தானுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டமும் கட்டி வைத்தார்.
தற்போது நடைபெறும் மாசித் திருநாள், துளுவ வம்சத்தைச் சார்ந்த விஜயநகர சாம்ராஜ்ய மன்னரான கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1509 - 1529) பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ப்ரம்மோத்ஸவத்தின் ஆகும். மாசித் திங்கள் நடைபெறும் திருநாளைக் கிருஷ்ணதேவ மகாராயர் திருநாள் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆயினும் இன்று மாசித் திங்களில் நடைபெறும் விழா அவர் பெயரால் குறிக்கப்படுவதில்லை. இத்திருநாள் தெப்பத் திருநாளாக ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இத்திருவிழா மாசி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை கடைசி நாளாகக் கொண்டு ஸ்ரீநம்பெருமாள் தெப்பத் திருநாள் 9 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
9 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி விபரம்:
04.02.22 முதல் நாள் – ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு 05.02.22 2ம் நாள் – அனுமந்த வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு 06.02.22 3ம் நாள் – கற்பக விருக்ஷ வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு 07.02.22 4ம் நாள் – கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு 08.02.22 5ம் நாள் – இரட்டை பிரபையில் நம்பெருமாள் புறப்பாடு 09.02.22 6ம் நாள் – யானை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு 10.02.22 7ம் நாள் – நம்பெருமாள் உபயநாசியார்களுடன் நெல்லளவு கண்டருளுதல் 11.02.22 8ம் நாள் – நம்பெருமாள் உபயநாசியார்களுடன் தெப்பம் கண்டருளுதல் 12.02.22 9ம் நாள் – நம்பெருமாள் ஒற்றை பிரபையில் புறப்பாடு மற்றும் பந்தக்காட்சி.