பதிவு செய்த நாள்
14
ஏப்
2022
07:04
திருப்பூர் : சித்திரை மாதம் இன்று பிறந்தது. தமிழ்ப் புத்தாண்டு திருநாளான இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று, சுபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறந்துள்ளது. வீடுதோறும், பழ வகைகளை, பூக்களை இறைவனுக்கு படைத்து, வழிபாடு செய்து புத்தாண்டை வரவேற்பர். முழு முதல்கடவுளான விநாயகருக்கு தீர்த்த பூஜை, பொங்கல், சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் பல பகுதிகளில் செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவே பலர் தீர்த்தம் எடுத்து வர கொடுமுடி, அவிநாசி, திருமூர்த்திமலை, பவானி, காவேரிஆறு உள்ளிட்ட பகுதிக்கு குழுவாக பயணமாகி விட்டனர்.
இன்று காலை பால் மற்றும் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வரும் பக்தர்கள், கோவில்களில் தீர்த்த, அபிேஷக, அலங்கார பூஜையில் பங்கேற்பர்.திருப்பூரில் பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பூஜை மற்றும் வழிபாட்டுக்காக நேற்று, தேவையான பழங்களை வாங்க தினசரி மார்க்கெட், பழைய மார்க்கெட் வீதி, பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக பழக்கடைகளை விட, கூடுதலாக புற்றீசல் போல ஆங்காங்கே பழம், பூ விற்பனை கடைகள் முளைத்திருந்தது.
வழக்கமாக கிலோ, 140 முதல் 160 ரூபாய் வரை விற்கும் ஆப்பிள் நேற்று விலை உயர்ந்து, 180 முதல், 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ரகத்தில் சிறிய ஆப்பிள்கள் தான் இந்த நிலை. பெரிய, தரமான ஆப்பிள், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோ, 120க்கு விற்பனையாகும் மாதுளை நேற்று கிலோ, 160 ரூபாய்.வழக்கமான நாட்களில் கிலோ, 40 முதல், 60 ரூபாய்க்கு விற்கும் வெள்ளை திராட்சை நேற்று கிலோ, 80 ரூபாயாக இருந்தது.
கறுப்பு திராட்சை, 150 ரூபாய், அன்னாசி பழம், 70 ரூபாய், சாத்துக்குடி, 70 ரூபாய்க்கு விற்றது. ஆனால், சப்போட்டா, 40. வெள்ளரி, 40, அன்னாசி, 50, விலையில் நேற்று மாற்றமில்லை. தொடர்ந்து விலை உயர்ந்து வரும் எலுமிச்சை, நேற்று, ஒரு பழம், ஒன்பது ரூபாய்க்கு விற்றது.
பழ வியாபாரிகள் கூறுகையில், கடந்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு நாளில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. மார்க்கெட், சந்தைக்கு கட்டுப்பாடு இருந்ததால், எதிர்பார்த்த விற்பனை இல்லை. ஆனால், நடப்பாண்டு இரண்டு நாட்களாக விற்பனை பரவாயில்லை. விலையும் சற்று குறைவு. காரணம், வாரச்சந்தைகள், கடந்த ஞாயிறு முதல் தொடர் விற்பனையில் பலர் பழங்களை வாங்கி சென்று விட்டனர். நேற்றைய கடைசி நேரம் விற்பனை சற்று களைகட்டியது என்றார்.
இன்று தமிழ்ப்புத்தாண்டு என்பதால், நேற்று பூக்களின் விலையும் உயர்ந்தது. 240 முதல், 300 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரளி நேற்று, 350 ரூபாய்க்கும், மல்லிகை பூ, 600 ரூபாய்க்கும் விற்றது.கடந்த வாரம் மல்லிகை, 300 ரூபாய்க்கு விற்றது. செவ்வந்தி - 240, சம்பங்கி - 80, பட்டுப்பூ - 80 ரூபாய்க்கு விற்றது. பூக்களை வாங்க மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.