தமிழ்ப்புத்தாண்டு : பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 08:04
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று காலை தீர்த்தவாரி நடைபெறும்.
குடவரை கோயில்களில் பிரசித்தி பெற்ற, நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் சுபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தால் அபிேஷகம், பூஜைகள் முடிந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் மூலவர் சன்னதி அருகில் எழுந்தருள்வார். தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். காலை 10:00 மணிஅளவில் வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் புறப்பாடாகி கோயில் குளப் படித்துறையில் எழுந்தருளுவர். தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம், தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் சிவாச்சாரியரால் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெறும். மாலை 6:30 மணி அளவில் வருட பஞ்சாங்கம் சிவாச்சாரியரால் வாசிக்கப்படும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுார் என்.கருப்பன், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் வி.சுப்பிரமணியன் ஆகியோர் செய்கின்றனர்.