சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்ரகாளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
ஏப். 12ம் தேதி இரவு 9:00 மணிக்கு பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். தொடர்ந்து காப்பு கட்டப்பட்டு திருவிழா துவங்கியது. 9 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஏப். 15ல் திருவிளக்கு பூஜையும், ஏப்.19 ல் பால்குடம், அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்தலும் நடக்கிறது. ஏப். 20 ல் அம்மன் வீதி உலா நடக்கிறது. சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்துச் சென்று வழிபட்டனர். கக்கன்ஜி நகரிலுள்ள காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் அக்கினிச் சட்டி ஏந்தி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.