உத்தமபாளையம், சின்னமனூரில் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 07:04
உத்தமபாளையம்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மனுக்கும், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் நேற்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது.
சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில சித்திரை திருவிழா ஏப், 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்தனர். நேற்று காலை 10. 29 மணிக்கு பூலாநந்தீஸ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. மஞ்சள் பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். சிவாச்சாரியார் பாலன் திருமாங்கல்யத்தை சூட்டினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ஒம் நமச்சிவாயா முழக்கம் விண்ணைத் தொட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று ( ஏப்.15) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இங்கு எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அம்மன் இளஞ்சிவப்பு பட்டுப் புடவையிலும், சுவாமி வெண்பட்டிலும் இருந்தனர். சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்தை சூட்டினார்கள். திருக்கல்யாணம் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்,
கம்பம் : கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுருளி அருவியில் திரளான பொதுமக்கள் குளித்தனர். பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள பூத நாராயணர் கோவில். ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் அன்னதானம் வழங்கினார்.