ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கலை முன்னிட்டு பூக்குழி திருவிழா நேற்று மாலை நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவை முன்னிட்டு ஏப்.3 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி வைபவம் நேற்று நடந்தது. அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அதனைத் தொடர்ந்து 9:00 மணிக்கு பூக்குழி திடலில் அக்கினி வார்ப்பு நடந்தது. மாலை அலங்கரித்த அம்மன் வீதிஉலா சுற்றி வந்ததும் காப்பு கட்டிய பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.நிகழ்ச்சியை முன்னிட்டு காந்திசிலை ரவுண்டானாவில் இருந்து போக்குவரத்து தற்காலிகமாக தாலுகா அலுவலகம் வழியாக பஞ்சு மார்க்கெட் வரை திருப்பி விடப்பட்டது. டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.