பதிவு செய்த நாள்
10
மே
2022
11:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, முகூர்த்த காய் உடைப்புடன் நேற்று துவங்கியது.பொள்ளாச்சியில், பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. கோவிலில் தேர் திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை, 9:30 மணிக்கு சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.ஆற்றுப்பகுதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மலரால் அலங்கரித்த மூங்கில், மேள, தாள, இசையுடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.கோவில் வளாகத்தில் மூங்கில், மூன்றாக உடைக்கப்பட்டு, முகூர்த்த காய் உடைத்து, மூங்கில் நவதானியங்கள் உள்ளிட்டவை கட்டி, அம்மனிடம் வைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகத்தினர், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று, பூச்சாட்டு விழா நடக்கிறது. வரும், 16ம் தேதி கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜையும், 17ம் தேதி கம்பம் நடும் விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 18ம் தேதி அங்குரார்ப்பணம், யாகசாலை ஆரம்பம், கொடியேற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.மேலும், வரும், 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை தினமும் காலையில் சப்பரத்திலும், மாலையில் குதிரை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.வரும், 25ம் தேதி மாவிளக்கு, பொங்கல் வைத்தலும், இரவு அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 26ம் தேதி காலை, 5:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர் திருத்தேருக்கு புறப்படுதல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.மறுநாள், 27ம் தேதி திருத்தேர் இரண்டாம் நிலை வடம் பிடித்தல், 28ம் தேதி திருத்தேர் மூன்றாம் நிலை வடம் பிடித்தல், தேர் நிலைக்கு வருதல், தேர்க்கால் பார்த்தல், கம்பம் கலைத்தல், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 29ம் தேதி மகா அபிேஷகம், அன்னதானம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.