பதிவு செய்த நாள்
13
ஜூலை
2022
12:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா கோலாகலமாக நடந்தது. சிவபெருமான் வீதியுலாவின் போது பக்தர்கள், மாங்கனிகளை வீசி மகிழ்ந்தனர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான, காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடக்கிறது. நேற்று காலை முக்கிய நிகழ்ச்சியான பரமதத்தர் மற்றும் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடந்தது. இதில் மேளதாளம் முழுங்க பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இன்று அதிகாலை, பிஷாடணமூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திக்குக்கும் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. நான்கு திசையிலும் வேதபாராயணங்கள், சென்டை, மத்தளம் மேளம் முழங்க, பவழக்கால் விமானத்தில், சிவபெருமான் காவியுடை, ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. அச்சமயம் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அர்ச்சனை செய்து, பக்தர்கள், வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்துச் சென்றனர்.