பக்தஜனேஸ்வரர் கோவிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2022 08:07
விழுப்புரம்: திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோவிலில் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோவிலில் விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் கள ஆய்வு செய்தனர்.அப்போது, கோவிலின் உள்ளே அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயில் மேற்புறம் சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கல்வெட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
கல்வெட்டு குறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது:இக்கல்வெட்டு சுவஸ்திஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி என தொடங்குகிறது. இது சோழர் மன்னன் முதலாம் பராந்தகனின் கல்வெட்டாகும். முதலாம் பராந்தகன் கி.பி., 907 முதல் கி.பி., 955 வரை ஆட்சி புரிந்தவர். அவரது பட்டத்து அரசியாக விளங்கியவர் கோக்கிழானடிகள். இவர் சேர மன்னனின் மகள். இவர்களுடைய மகன்தான் இளவரசன் ராஜாதித்தன், திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலுாரில் சோழர் படை முகாம் அமைத்து சோழ நாட்டின் வட பகுதியை பாதுகாத்து வந்தவர். முதலாம் பராந்தக சோழனின் 28வது ஆட்சியாண்டான கி.பி., 935ல் சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலமான திருதொண்டீஸ்வரம் (பக்தஜனேஸ்வரர்) சிவாலயத்தை இளவரசன் ராஜாதித்தன் கற்கோவிலாக மாற்றியுள்ளார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ராஜாதித்தன் மனைவி வீரசிகாமணி என்பவர் பராந்தக சோழனின் திருதொண்டீஸ்வரமான ராஜாதித்த ஈஸ்வரத்து மகாதேவர்க்கு திருநொந்தா விளக்கு எரிப்பதற்கு 100 ஆடுகளையும், 170 பலம் எடை கொண்ட ஒரு ஈழ விளக்கும் கொடுத்துள்ளார் என்பதை குறிப்பிடுகிறது.இவ்வாறு ரமேஷ் கூறினார்.