பதிவு செய்த நாள்
15
ஜூலை
2022
10:07
ஏரல்:குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நேற்று கோலாகலமா க நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயிலில் இந்த ஆண்டு ஆனிப்பெருந்திருவிழா அன்று மதியம்1 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 1 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அன்று இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், 10 மணிக்கு மாவிளக்கு பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இரவு 2 மணிக்கு பெரிய சப்பரத்தில் ஸ்ரீ நாராயணசுவாமி திருவீதி வலம் வருதல் நடந்தது. நகர் உலா சென்ற சுவாமியை பொதுமக்கள் திருக்கனி சாத்தி வழிபட்டனர். ஆனிப்பெருந்திருவிழாவில் சென்னை, கோவை, உசிலம்பட்டி, துாத்துக்குடி, நெல்லை, திருச்செந்துார் பகுதி பக்தர்கள், தொழிலதிபர்கள், ஏரல் நகர வியாபாரிகள், சுற்று வட்டார பொதுமக்கள் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து வரும்19ம்தேதி எட்டாம் நாள் கொடை விழா நடக்கிறது. அன்று மதியம் தீர்த்தவாரி நடக்கிறது. மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும், இரவு சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கம் சார்பில் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஆனிப்பெருந்திருவிழா மற்றும் எட்டாம் நாள் கொடைவிழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார் பொதுமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.