மாட்டுவண்டிகளில் குலதெய்வ கோவிலுக்கு சென்ற உறவினர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 05:07
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி பங்காளிகள் ஒன்று கூடி மாட்டு வண்டிகளில் பயணம் செய்து சாமி கும்பிடுவதால் குடும்பங்களில் பாசம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பங்காளிகள் சிலர் அங்கிருந்து தங்களது உறவினர்களை கூட்டிக்கொண்டு மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் உள்ள தங்களது குலதெய்வமான முத்தையா சுவாமி கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி 10க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மானாமதுரை வழியாக நேற்று மாலை மேலப்பிடாவூர் கிராமத்திற்கு சென்றனர். அவர்கள் செல்லும்போது அவர்களுடன் தங்களது குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடனுக்காக வாங்கிய மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.மானாமதுரை நகருக்குள் ஏராளமான மாட்டு வண்டிகளில் பாரம்பரிய முறைப்படி கோயிலுக்கு ஏராளமானோர் நடந்து செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.இது குறித்து ஒக்கூர் புதூரை சேர்ந்த கார்த்திக்24, என்பவர் கூறுகையில், சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் எங்களது உறவினர்களோடு 4வருடங்களுக்கு ஒரு முறை மாட்டு வண்டிகளில் மேலப்பிடாவூரில் உள்ள எங்களது குலதெய்வமான முத்தையா சாமி கோயிலுக்கு சென்று ஆடு,மாடுகளை நேர்த்திக்கடனாக விடுவது வழக்கம்.மேலும் அங்கு தங்கியிருந்து ஆடு,கோழிகளை பலியிட்டு உறவினர்களோடு சேர்ந்து ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வருவது வழக்கம். ஒக்கூர் புதூரில் இருந்து உறவினர்களும்,பங்காளிகளும் ஒன்றாக சேர்ந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிகளில் வருவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனால் எங்களது உறவினர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி குடும்ப பாசமும் அதிகரித்து வருகிறது என்றார்.