பதிவு செய்த நாள்
16
ஜூலை
2022
05:07
பல்லடம்: இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டதை தொடர்ந்து, அல்லாளபுரம் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த பச்சைக்கொடி காட்டி உள்ளனர்.
பல்லடம் அருகே, கரைபுதூர் கிராமத்துக்கு உட்பட்ட அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரியகாளியம்மன் கோவில்கள், 27 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, கோவிலில், ஆகம விதிப்படி உண்ணாமுலை அம்மன் சிலையை மாற்றி அமைத்த பின் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். ஏற்கனவே நான்கு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் தாமதமாகி வருகிறது. எனவே, குறித்த தேதியில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சிலைகள் மாற்றி அமைப்பது குறித்து பின்னர் ஆலோசிக்கலாம் என மற்றொரு தரப்பினர் கூறினர். இவ்வாறு இரு தரப்பினருக்கு இடையை கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று அறநிலையத்துறை இணை கமிஷனர் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, அலகுமலையில் உள்ள தனியார் மண்டபத்தில், நேற்று இரு தரப்பினரும் சமரச பேச்சில் ஈடுபட்டனர். குறித்த தேதியில், உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும். இதற்கும், அதிகாரிகள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் உண்ணாமுலை அம்மன் சிலையை மாற்றி வைத்து கொள்ளலாம் என, இருதரப்பினரும் தீர்மானித்தனர். இதையடுத்து, செப்., 8ம் தேதி இரு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்த இரு தரப்பினரும் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். மேலும், அம்மன் சிலையை மாற்றி வைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.