பதிவு செய்த நாள்
23
மார்
2026
09:03
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, ஓதுவார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘விஜில்’ அமைப்பு சார்பில், ‘பண்ணிசை பெருவிழா – ஓதுவார்களுடன் ஒருநாள்’ மற்றும் விருது வழங்கும் விழா, சென்னை, மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.,மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
விழாவில், திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார், பழனி சண்முக சுந்தர தேசிகர், மதுரை சோமசுந்தரம் ஓதுவார், சிவன்மலை சுந்தரமூர்த்தி ஓதுவார், கொல்லாபுரம் சாமிநாத ஓதுவார் ஆகிய ஐந்து ஓதுவார்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், விருதும் வழங்கி கவுரவம் செய்யப்பட்டது.
முன்னதாக காலையில், பழனி சண்முக சுந்தர தேசிகர், மயிலாப்பூர் சற்குருநாத ஓதுவார், மயிலாடுதுறை சிவக்குமார் ஓதுவார், மதுரை பொன்.முத்துக்குமரன் ஓதுவார் ஆகியோரின், திருமுறை சேர்ந்திசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசியதாவது:
இதுவரை எத்தனையோ பிரதமர்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் ஓதுவார்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரதமர் மோடி ஆட்சியில் தான் ஓதுவார் திருத்தணி சாமிநாதனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பல கடினமான சூழல்களுக்கு இடையில், திருமுறைதான் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதன் பெருமையையும், தமிழின் பெருமையையும் அனைவரும் உணர வேண்டும். கல்யாண நிகழ்ச்சி உட்பட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், ஓதுவார் மூர்த்திகளை அழைத்து ஆதரவு வழங்க வேண்டும்.
தொடர்ந்து, செங்கோல் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திண்டுக்கல் ஆதீனம், சிவபுரம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
விழா நிறைவில், ‘விஜில்’ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் பேசுகையில்,‘‘ஓதுவார்கள் முன் வைத்த கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். அவர்கள் ஆற்றும் தொண்டுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்,’’ என்றார்.
தமிழக ஓதுவார் நலச்சங்க செயலர் பொன்.முத்துக்குமரன் ஓதுவார், மத்திய அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள்:
* பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்
* மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வாயிலாக பண்ணிசைக்கான பிரத்யேக பயிற்சி கேந்திரம் உருவாக்க வேண்டும்
* தமிழகத்தின், பி, சி பிரிவு கோவில்களில் பணியாற்றும் ஓதுவாமூர்த்திகளுக்கு, குறைந்தபட்ச சம்பளமாக, 35,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும்
* ஓதுவாமூர்த்திகளுக்கு ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்
* ஒரு ஓதுவார், தன் சுயமுயற்சியில் ஆர்வமுள்ள நபர்களைத் தேடிப்பிடித்து, பண்ணிசை பயிற்றுவிக்கும் பட்சத்தில், அவருக்கு சைவ ஆதீனங்கள், ஊக்கத் தொகை வழங்க வேண்டும்
* அனைத்துப் பல்கலைகளிலும், பண்ணிசைக்குத் தனித்துறை உருவாக்கப்பட்டு அதன் வாயிலாக, பண்ணிசை பயிற்சி அளிக்க வேண்டும்; பண்ணிசைவாணர்கள் உருவாக்கப்பட வேண்டும்
* பள்ளிகளில் மாணவர்களுக்குப் பண்ணிசை பயிற்சி அளிக்கப்பட வேண்டும்
* ஓதுவார்களுக்கு, இசை கலைஞர்கள் என்ற அந்தஸ்து கொடுக்கப்பட்டு, அதற்கேற்ப அவர்களது பணியிடம் வகைப்படுத்தப்பட வேண்டும். அதன் வாயிலாகவே அவர்களின் கவுரவத்தை நிலை நாட்டப்பட முடியும்
* சைவ ஆதீனங்கள் இணைந்து, ஒரு நிதியம் உருவாக்கி, அதன் வாயிலாக கோவில் சாராத ஓதுவார்கள், நலிவுற்ற ஓதுவார்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கோரிக்கைகளை முன் வைத்தார்.