பதிவு செய்த நாள்
23
மார்
2026
09:03
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும், 20வது பன்னிரு திருமுறை இரண்டு நாள் இசை விழா, தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நேற்று துவங்கியது.
துவக்க விழாவில், திருத்தணி சுவாமிநாதனுக்கு, ‘திருமுறை இசை வித்தகர்’ விருதை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணை தலைவர், டாக்டர் சுதா சேஷய்யன் வழங்கினார். விழாவில், சுதாசேஷய்யன் பேசியதாவது:
இறைவனையே இசையாக பார்ப்பது நம் பாரம்பரியம். அந்த வகையில், திருமுறை இசை விழா நம் பாரம்பரியத்தை, நாம் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி. திருமுறையில் என்ன இருக்கிறது என்று யாராவது கேட்டால், என்ன இல்லை என்று துணிச்சலாக கேட்கலாம்.
திருமுறைகளை தெய்வமாக கொண்டாடுகிறோம். சில கோவில்களில் திருமுறைக்கு தனி சன்னிதி உண்டு. தெய்வம், தெய்வீகம் என்று வழிபட்டு, திருமுறையில் இருப்பவற்றை நம் வாழ்க்கையில் பயன்படுத்த முடியும் என்பதை மறந்துவிட்டோம்.
திருமுறைகள், நாம் வாழ பல வழிகளை காட்டும் என்பதை, நம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில், தருமையாதீன புலவர் பணசை மூர்த்தி சொற்பொழிவும், கிரிஜா ராமசாமி, திருத்தணி சுவாமிநாதன், ஜே.பி.கீர்த்தனா, ஈஸ்வரன் – ஸ்ரீவித்யா சந்திரசேகர் ஆகியோரின் தேவார இன்னிசை நடந்தது.
நிகழ்வில், தேவ ஆகம தமிழிசை மன்ற அமைப்பாளர் சுவாமிநாதன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, பிள்ளையார்பட்டி கோவில் தலைமை அர்ச்சகர் பிச்சைக் குருக்கள், கிருஷ்ண கான சபா செயலர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பன்னிசை திருமுறை இசை விழா இன்று நிறைவு பெறுகிறது.