பதிவு செய்த நாள்
06
ஆக
2022
11:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகாலில் சுவாமி விவேகானந்தர், ராமாயண வரலாறு நிகழ்வை 3டியில் பிரமிக்க வைக்கும் ஒலி, ஒளி காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.
1897 ஜன., 26ல் சுவாமி விவேகானந்தர் வெளிநாடு ஆன்மீக சுற்று பயணம் முடித்து முதலில் பாம்பன் வந்திறங்கினார். அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தரை முழங்காலிட்டு வரவேற்றதால், இந்த இடத்திற்கு குந்துகால் என பெயரிட்டனர். இதனை நினைவு கூறும் விதமாக பாம்பன் குந்துகாலில் பிரம்மாண்டமான விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இங்கு விவேகானந்தர், ராமாயணம், ராமேஸ்வரம் கோயில் வரலாறுகள் குறித்து 3 டியில் ஒலி, ஒளியில் காட்சிபடுத்திட மத்திய அரசு ரூ. 5 கோடியில் நவீன இயந்திரங்களை பொருத்தியது. இதனை தமிழக சுற்றுலா துறையினர் பராமரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள், உள்ளூர் மக்கள் வரலாற்று நிகழ்வுகளை பிரமிப்பூட்டும் ஒலி, ஒளி காட்சியில் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். 20 நிமிடம் ஒளிபரப்பும் இக்காட்சிக்கு இளையராஜா இசையில், ஹரிஹரன் பின்னணி பாடலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர். இரவு 7 மணிக்கு துவங்கும் இக்காட்சியை காண பெரியவர் ரூ. 100, சிறியவர் ரூ. 50 கட்டணம் வசூலிக்கின்றனர்.