பதிவு செய்த நாள்
19
ஆக
2022
10:08
மேட்டுப்பாளையம்: சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், அடுத்த மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, கும்பாபிஷேகப் பணிகள் துவங்கியுள்ளன.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரை ஓரத்தில், மிகவும் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இறுதியாக, 1984ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதனால் கோவில் கோபுரங்கள் சிதிலமடைந்து காணப்பட்டது. திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தும்படி, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பழைய கோவிலை இடித்துவிட்டு, புதிதாக கோவில் கட்டும் பணிகள் துவங்கின. அனைத்து திருப்பணிகளும் முடிந்த நிலையில், கடந்த ஓராண்டாக கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கி உள்ளது. இதை அடுத்து மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தை சேர்ந்த பணியாளர்களும், மேட்டுப்பாளையம் நகரத்தை சேர்ந்த பணியாளர்களும் இணைந்து, யாகசாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அல்லாமல் கோவிலின் உள்ளே, கதவுகள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
ஓம் முருகா பல்பு மாற்ற வேண்டும்: கோவிலின் நுழைவாயில் கோபுரத்தின் மீது, ’ஓம் முருகா’ என்ற வாசகம் மின்சார பல்புகளில் எழுதப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் பல்புகள் உடைந்தும், வாசகத்தை தாங்கி நிற்கும் இரும்பு தகர பெட்டி, துருப்பிடித்து காணப்படுகிறது. கோவில் கோபுரத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசி, புதுப்பித்த கோவில் நிர்வாகம், இந்த பல்புகளையும், பெட்டியையும் புதிதாக அமைக்க வேண்டும். மேலும் கோவிலின் நுழைவாயில் இரும்பு கேட் உடைந்த நிலையில் உள்ளது. இதையும் மாற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வன பத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி கூறுகையில்,‘ சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், செப்டம்பர் மாதம், 5ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை அடுத்து, யாக சாலை திருப்பணிகள் நடைபெறுகின்றன. மேலும் கோவிலில் உள்ள சிறு சிறு பணிகள், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,‘ என்றார்.