பதிவு செய்த நாள்
02
செப்
2022
07:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தாலுகா பண்ணப்பள்ளி கிராமத்தின் வடக்குப்புறும், ‘நிலவுக்கல்’ என உள்ளூர் மக்களால் அழைக்கப்படும், 10ம் நுாற்றாண்டு நுளம்பர் காலத்து கன்னட கல்வெட்டு கண்டறியப்பட்டது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை இரண்டாமாண்டு வரலாற்றுத்துறை மாணவர்கள் இதை கண்டறிந்தனர்.
இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: இந்த நடுகல் கல்வெட்டு, 10ம் ஆண்டை சேர்ந்த நுளம்ப மன்னன் வீரா நுளம்பன் என்று அழைக்கப்படும் அன்னிகன் என்ற மன்னனின் காலத்து, கன்னடமொழி நடுகல் கல்வெட்டு. இதிலுள்ள வீரன் வலது கையில் வாள் ஏந்தியவாறும், இடதுகையில் வில் ஒன்று பிடித்தவாறும் உள்ளான். வீரனின் இடுப்பில் இடைவாள், கழுத்தில் அணிகலன்கள், கைகளில் காப்பு மற்றும் வளையங்கள் அணிந்துள்ளான். வீரனின் இடது கையின் மேல் பகுதியில் இரண்டு தேவதைகள், இறந்த வீரனை சொர்க்கத்துக்கு அழைத்து செல்வதுபோல் உள்ளது. மேலும், ராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் என்ற மூன்றாம் கிருஷ்ணனின் படைத்தளபதியான அரகெல்லா என்பவர், இப்பகுதியில் படையெடுத்தபோது, அவருடன் எதிர்த்து போரிட்ட அன்னிகன் என்ற, வீர நுளம்ப மன்னனின் படைவீரர்களின் ஒருவரான பாலையா என்ற போர் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். அவருக்கு, அன்னிகன் என்ற வீர நுளம்பன், வீரத்தை போற்றி நிலம் தானமாக கொடுத்துள்ளான் என்ற செய்தியை, இந்த நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாலையாவின் குடும்ப உறுப்பினர்கள், அவர் வீரத்தையும், அரசன் கொடுத்த நில தானத்தையும் போற்றும் வகையில், இந்த நடுகல்லை எடுத்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.