பதிவு செய்த நாள்
17
டிச
2022
09:12
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின், வி.ஐ.பி., கட்டண தரிசனத்தில் அரசியல்வாதிகள், காவல் துறையினர் மற்றும் அரசு ஊழியர்களின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு பெரும் வேதனை அளிக்கிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் சிபாரிசு தரிசனத்திற்கு, அனுமதிச் சீட்டு முறை செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரத்து, 121 கோவில்கள், திருமடங்கள், அதனுடன் இணைந்த கோவில்கள், அறக்கட்டளைகள், சமண கோவில்கள், உப கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக உள்ள, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும், 331 பிரதான கோவில்கள் உள்ளன. குறிப்பாக வரலாற்று பிரசித்தி பெற்ற, 48 முதுநிலைக் கோவில்கள் உள்ளன. பிரதான விழாக்களில் முதுநிலை கோவில்களில் கூட்டம் அலைமோதும். அதுபோன்ற காலங்களில் மூலவர் தரிசனத்திற்காக, பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் நிலவும்.
வருவாய் இழப்பு: வி.ஐ.பி.,க்கள், வயதான வர்கள், வெளியூர்களில் இருந்து பல மணி நேரம் பயணித்து வரும் பக்தர்கள் வசதிக்காக, பிரதான கோவில்களில் சிறப்பு கட்டண தரிசன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. முதுநிலைக் கோவில்களில் தினசரியும், பிரதான கோவில்களில் விழாக்கள், உற்சவத்தின்போதும், உள்ளூர் அரசியல்வாதிகள், தலைமை செயலக அதிகாரிகள், காவல் துறையினர், மின் வாரியத்தினர் என பல்துறை ஊழியர்களின் தலையீடு அதிகம் காணப்படுகிறது. அவர்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என பெரும் படையை, சிறப்பு தரிசன வழித்தடத்தில் இலவசமாக அனுப்பி வைக்கின்றனர். இதனால், முறையாக கட்டணம் செலுத்தி தரிசிக்க வரும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்
படுகின்றனர்.கோவில் நிர்வாகத்தினர், ஊழியர்களும் புரோக்கர்கள் வாயிலாக, பக்தர்களி டம் கணிசமாக பணம் பெற்று, சிறப்பு கட்டண தரிசனத்தில் இலவசமாக அனுப்பி, கோவிலுக்கு வரு மான இழப்பு ஏற்படுத்தி, சுயலாபம் பார்க்கின்றனர். அறநிலையத் துறை என்னதான் கிடுக்கிப்பிடி போட்டாலும், இதுபோன்று முறைகேடுகள் தொடர்கின்றன. இது வருமான இழப்புஏற்படுத்துவதோடு, கோவில் நிர்வாக ஊழியர்கள், கட்டண தரிசன பக்தர்களிடம் தகராறு ஏற்பட காரணமாக அமைகிறது.
நவீன தொழில்நுட்பம்: கடந்த பல ஆண்டுகளாக, அறநிலையத் துறைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டு இருந்தது. தி.மு.க., ஆட்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் கூட்டணி பல்வேறு திட்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தையும் செயல்படுத்தி வருகிறது. வரும் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, பொங்கல் விழாவின்போது, பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட்டம் அலைமோதும். அப்போது, முறைகேடான தரிசனத்திற்கு தீர்வு காண வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கியூஆர் கோடு அனுமதி சீட்டு: பிரசித்தி பெற்ற கோவில்களில் நடக்கும் முக்கிய விழாக்கள், சிறப்பு நாட்களில், அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் இலவச தரிசனத்திற்கு தேவையான அனுமதிச் சீட்டு, கியூஆர் கோடு வசதியுடன் அறநிலையத் துறையோ, அரசோ வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதி சீட்டு இல்லாதவர்களை, இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என, அறநிலையத் துறை கடுமையான உத்தரவிட்டு, அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இதன் வாயிலாக, அடாவடி தரிசனத்திற்கு தீர்வு கிடைக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணியர் வசதிக்காக, கியூஆர் கோடு வசதியுடன் கூடிய கார்டு வழங்கப்படுகிறது. அதில், ஆன்-லைன் வாயிலாக பணம் செலுத்திக் கொள்ளலாம். நுழைவாயிலில் உள்ள இயந்திரத்தில் பொறுத்தப்பட்டுள்ள, சென்சார் பகுதியில் கார்டை காண்பித்தாலோ அல்லது டோக்கன் செலுத்தினாலோ, உள்ளே நுழைய அந்த இயந்திரம் அனுமதிக்கிறது.அதேபோன்று, பக்தர்கள் அதிகம் வரும் முதுநிலைக் கோவில்களில், வி.ஐ.பி., சிறப்பு கட்டண நுழைவாயிலில் இயந்திரத்தை பொறுத்தினால், கோவிலுக்கான வருமான நஷ்டம் தவிர்க்கப்படும். - நமது நிருபர்-