பதிவு செய்த நாள்
03
ஜன
2023
07:01
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 3:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். பின்னர் பெரிய பெருமாள் தோளுக்கினியானிலும், ஆண்டாள், ரெங்கமன்னார் சேர்த்தியிலும் வேத விண்ணப்பமாகி, மூலஸ்தானத்தில் இருந்து உட்பிரகாரம் சுற்றி புறப்பட்டனர். அப்போது சொர்க்கவாசல் மண்டபத்தில் ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்க, காலை 06:30 மணிக்கு சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் பெரியபெருமாளும், அதனைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னாரும் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினர். திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாடவீதி, கந்தாடை வீதிகள் வழியாக வடபத்திர சயனர் சன்னதி ராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார், பெரிய பெருமாள், ஆழ்வார்கள் எழுந்தருள அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் சடகோப ராமானுஜ ஜீயர், தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை உட்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ராப்பத்து உற்சவம் துவக்கம்: நேற்று (ஜன. 2) முதல் ஜனவரி 11 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படாகி, மாட வீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதிக்கு வந்தடைகிறார் அங்கு திருமஞ்சனம், கைத்தல சேவை, திருவாதனம், அரையர் வியாக்கியானம், பஞ்சாங்கம் வாசித்தல், பொது ஜன சேவை நடக்கிறது. பின்னர் அதிகாலை 05:30 மணிக்கு ஆண்டாள் புறப்படாகி மூலஸ்தானம் வந்தடைகிறார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், பட்டர்கள் செய்துள்ளனர்.