மயிலாடுதுறை: சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 28 வது தலமாக இத்தலம் திகழ்ந்து வருகிறது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. 5:30 மணிக்கு ரத்ன அங்கி அலங்காரத்தில் பெருமாள் கோவில் பிரகாரம் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து சொர்க்கவாசல் என்று அழைக்கப்படும் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி பெருமாளை சேவித்தனர். பின்னர் பெருமாள் வீதி உலாவாக வந்து கோவிலில் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காண கிடைக்கும் பெருமாளின் வலது திருவடி சேவையை கண்டு தரிசனம் செய்தனர். மாலை நம்மாழ்வாரின் திருவாய்மொழி முதற் பற்று சேவை மற்றும் சாற்று முறை நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பத்ரி பட்டாச்சாரியார் செய்திருந்தார். இதனை முன்னிட்டு கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுபோல மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளா ரங்கநாதர் கோவில், கோழிகுத்தி வான முட்டி பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவில், திருநாங்கூர் 11 திவ்ய தேச கோவில்கள், தேரிழந்தூர் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருள பக்தர்கள் தரிசனம் செய்தனர்.