பதிவு செய்த நாள்
09
ஜன
2023
10:01
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் அபயாம்பிகை யானை ஆலயத்திற்கு வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சீர்வரிசை எடுத்து வந்து கொண்டாடிய ஊர் மக்கள், காலில் கொலுசு கழுத்தில் டாலர் அலங்கார மணி, அணிந்த யானை, சிறப்பு கலசபிஷேகத்துடன் தீபாராதனை, கரும்பு பொரிகடலை பழங்கள் காய்கறிகள் வெல்லம், குளிர்பானம் வழங்கி பாசத்தை பகிர்ந்து கொண்டு பக்தர்கள் உற்சாகம். தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் யானைகளை வழங்கி தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று விழாவில் பங்கேற்ற திருவாவடுதுறை ஆதீனம் கோரிக்கை விடுத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர். மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாக மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும் யானை ரசிகர்களும் இன்று பொன்விழா வாக கொண்டாடினர். இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் புனித நீர் யானை மேல் ஏற்றிக்கொண்டு வரப்பட்டு யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்டது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது காலில் கொலுசு கழுத்தில் அடையாள சங்கிலி மற்றும் டாலர் அணிவிக்கப்பட்டு முகபடாம் மற்றும் புத்தாடைகளுடன் யானை புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. தொடர்ந்து கரும்பு, அச்சு வெல்லம், பொரிகடலை, பழ வகைகள், கிழங்கு வகைகள், இனிப்புகள், பண் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசையாக எடுத்து வந்து பாசத்துடன் யானைக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகராட்சி நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் யானையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் கூறுகையில் காடுகளில் உள்ள யானைகள் உணவு இல்லாமல் நகரங்களில் உள்ள வீடுகளில் புகுந்து சேதப்படுத்துகிறது. திருக்கோயில்களை கட்டி வைத்து அரசர்கள் கோயிலுக்கு யானைகளை கொடுத்துள்ளனர். அதுபோல் தமிழக அரசும் அனைத்து கோயில்களுக்கும் யானைகளை வழங்கி பாதுகாக்க வேண்டும். சிவனை யானை பூனை குரங்கு பூஜித்துள்ளது. அதுபோல் மயிலாடுதுறையில் மயில் சிவனை பூஜித்த சிறப்பான தலம் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம். இங்கே அவையாம்பிகை என்ற பெயர் சூட்டப்பட்ட பெண் யானை கோயிலுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆயுள் ஹோமம் கலசபிஷேகம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அனைவரும் இறையருள் பெற வேண்டும் என்றார்.