பதிவு செய்த நாள்
14
ஜன
2023
04:01
மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஜனவரி 14-ஆம் தேதி, சுவாமி விவேகானந்தரின் 161-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணிக்கு மங்கள ஆரதி, வேதபாராயணம், 6.30 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோயிலை வலம் வரும் நாம சங்கீர்த்தனம், காலை 7.30 மணிக்கு விசேஷ பூஜைகள், பஜனை ஆகியவை நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டே சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படத்துடன் சாரதா வித்யாலாய பள்ளி மாணவ - மாணவிகளின் ஊர்வலம், 10.30 மணிக்கு ஹோமம், 11.15 மணிக்கு சுவாமி கமலாத்மானந்தரின் ஆன்மிகச் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பின்வருமாறு சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்திய நாடே சுவாமி விவேகானந்தரின் திருக்கோயில், இந்திய மக்களே அவரது தெய்வங்கள். சுவாமி விவேகானந்தர் தனது புகழ் பெற்ற சிகாகோ சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே, “சகோதரிகளே, சகோதரர்களே!” என்று கூறியதன் மூலம், ‘உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தர், உயர்ந்த மனிதர்களை உருவாக்குவதையே தலையாய பணியாகக் கருதினார். அதை அவர் தமது குறுகிய வாழ்நாளில் இயன்ற வரையில் செய்யவும் செய்தார்.
“மனிதன் தெய்வாம்சம் பொருந்தியவன்” என்பதே, சுவாமி விவேகானந்தர் உலகிற்கு வழங்கிய முக்கிய செய்தியாகும். “மனிதன் தெய்விகம் வாய்ந்தவன்” என்பதை உணர்ந்துகொள்வது இறையனுபூதி நிலையாகும். இத்தகைய இறையனுபூதியைப் பெறுவதற்கு உரிய பக்குவம் ஆன்மாவுக்கு விரைவில் வந்துவிடுவதில்லை. நீண்ட காலம் (பலருக்குப் பல பிறவிகள் கூட ஆகும்) ஆன்மிக சாதனைகளை மேற்கொண்ட பிறகுதான், ஆன்மா அந்தப் பக்குவ நிலையை அடைகிறது. பலர் ஆன்மிக இலக்கியங்களைப் படிக்கிறார்கள், சிலர் ஆன்மிக இலக்கியங்களைப் படைக்கிறார்கள். ஆனால் சுவாமி விவேகானந்தர் ஆன்மிக இலக்கியமாகவே வாழ்ந்தவர். சுவாமி விவேகானந்தர் ஒரு பூரணஞானி. அவர் மனிதகுலத்திற்கு ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம் போன்ற தமது கருத்துகளால் ஏராளமான ஆன்மிகச் சிந்தனைகளை வாரி வாரி வழங்கினார்.
நல்ல சூழ்நிலைகள், ஆரோக்கியமான நற்பழக்கங்கள், ஆன்மிகச் சிந்தனைகள் போன்றவை மனிதனிடமுள்ள தெய்விக குணங்கள் வெளிப்படுவதற்கு உதவுகின்றன; ஆக்கம் விளைவதற்குக் காரணமாகின்றன. இதற்கு மாறானவை சமுதாயத்தில் செல்வாக்கு பெறும்போது விலங்கு - அசுர இயல்புகள் தலைவிரித்து பேயாட்டம் போடுகின்றன. எனவே மிருகநிலையிலிருந்து மனிதநிலைக்கு உயர்வதற்கு, நாம் இடைவிடாமல் ஆன்மிக முயற்சி செய்ய வேண்டும். பூரண ஞானம் பொலிந்த நந்நாடு பாரதம். ஞான பக்தர்களான வீரர்கள் வாழ்ந்த புனித நாடு பாரதம். அவர்கள் தங்கள் உள்ளத்தில் பூத்த ஆன்மிக அனுபவ மலர்களை நமக்கு வைப்பு நிதியாக வைத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை ஓரளவுக்காகிலும் நாம் ஆழ்ந்து சிந்திப்போமானால், சமுதாயத்தில் ஆக்கச் சக்திகள் பெருகும். வர இருக்கும் நூற்றாண்டில் தெய்விகம் மங்கிய நிலை என்பது குறைவாகவும், தெய்விகம் ஒளி வீசும் நிலை என்பது அதிகமாகவும் இருக்கும். இவ்வாறு தன் சொற்பொழிவில் கூறினார். ஆரதிக்கு பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 400 பேருக்கு பகலுணவு பிரசாதம் வழங்கப்பட்டது.