பதிவு செய்த நாள்
10
பிப்
2023
05:02
மேட்டுப்பாளையம்: பெள்ளாதி கரிய மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, புஞ்சை நிலம், 2.10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
காரமடை அருகே பெள்ளாதியில் கரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 17.45 ஏக்கர் புஞ்சை நிலம், ஏலம் விடுவது சம்பந்தமாக, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் ஏலம் நடைபெறாமல் இருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, ஏலம் நடைபெற்றது. காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், ஊட்டி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலைத்துறை கோவில்களின் மேட்டுப்பாளையம் ஆய்வாளர் ஹேமலதா ஏலத்தை நடத்தினார். இதில் ரங்கராஜ், ரவிக்குமார் ஆகிய இருவர் ஏலம் எடுக்க, அதற்கான டெபாசிட் தொகையை கட்டியிருந்தனர். கோவில் நிலத்தை, மூன்று ஆண்டுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள, ரவிக்குமார் என்பவர், ஒரு ஆண்டுக்கு, 2 லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.