தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2023 10:03
சிவகங்கை : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவையொட்டி தென் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று இரவு 11 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜையுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி பொங்கல் வைபவ நிகழ்ச்சியும், 6 ஆம் தேதி இரவு மின் விளக்கு அலங்காரத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. 7-ந்தேதி பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மறுநாள் ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் நாள் விழா காலையில் தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.