பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
08:04
திருவண்ணாமலை: பங்குனி மாத பவுர்ணமியான நேற்று, திருவண்ணாமலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை, பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், 14 கி.மீ., துாரம் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 10:17 முதல், இன்று, 6ம் தேதி காலை, 10:58 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரமென கோவில் நிர்வாகம் அறிவித்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், குடிநீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.